பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

என் படக் கவிதைகள்..... பிச்சிப்பூவைப் பார்த்து பார்த்து வரைந்த ஓவியனின் ஓவியமாய்.....



அன்னையெனும் தியாக சொரூபி




என் கருவிழியின்
நரம்புகளுக்குள்
திவலை கட்டிய நீரினைக்
கண்டு கண்டே
உயிர் பதறும்
மயிர் நிறைந்த இமைகள் நீ!

கண்களின் பாஷைகளை
கண்சிமிட்டியே
கற்றுக் கொடுத்து
நிலவோடும் மலரோடும்
இணைய வைத்த
திருப்புதல்வி நீ!

என் அறை முழுவதும்
சப்தமின்றி பரவிக் கிடக்கும்
இறைவனோடு கலந்த
ஒளிச் சிதறல் நீ!

மேகக் கூடலில்
வண்ணமில்லா, வன்மையில்லா
தூய்மையான மழைத்துளியின்
ஓர் துளி அணு நீ!

தன்மையும், மென்மையும்,
பெண்மையும், உண்மையும்
கலந்த இக் காலத்ததின்
பொருத்தமான காவியம் நீ!

ஆயிரம் கவிதைகள்
உள்ளடங்கிய
ஆற்றல் வைரத்தினைவிட
ஒப்பில்லா
திருக்குறள் நீ!

நிறமும், சுவையும்,
உயிரும், விலையும்,
இல்லா ஜடப் பொருள்களுக்கு
கண்ணசைவில் உயிர்கொடுக்கும்
பார்வதியும் நீ!

இந்த யுகங்களின்
தூய்மையான ராகமாகிய
தாலாட்டின் தாய்மை நீ!

மலர்ந்து, குலுங்கும்
பூக்களின் மகிழ்ச்சியில்
குதூகலிக்கும் புன்னகை நீ!

மேகக் கூட்டங்களில்
ஆழ்ந்துறங்கும்
வெண்மதியின் மடியமர்ந்து
என்னை உறங்கவைத்த
தியாக சொரூபி நீ!

பூ மொட்டுக்களை
பார்வைக் கணைகளால்
ஏற்றி, கனியாக்கம் செய்யும்
தென்றலின் தலைவி நீ!

எத்தனை தவமிருந்தும்
எத்தனை வரம் பெற்றும்
காணக் கிடைக்கா தெய்வமும்
கிடைக்கக் காணா வரமும் நீ!

(ஆயிரம் வருடங்கள்
தவம் செய்து, வரம் பெற்ற
ஞானியர் எவரும்
காணாத தெய்வம் நீ!)

ஒரு விழியில்
இரு விழியாக்கி
ஒரு உயிரினில்
இன்னுயிர் இட்டு
வலிபிடுங்க பிச்சியைப்
பெற்றெடுத்தவள் நீ!

ரம்மியமாக சப்தமிடும்
ரீங்கார வண்டுகளின்
சத்தத்தில்
பிச்சிப்பூ வரவேற்க
மெளனமே பாடலாய் பாடும்
இணையில்லா ராகத்தின்
முதல் வரி நீ!

பல வார்த்தைகள் அடங்கிய
ஈடில்லா கவிஞனின்
கவிதைக்குள்,
மறைமுகமாய்
மறைந்திருக்கும்
உட்கருத்து நீ!

சிறு சத்தத்தோடு ஒரு
முத்தம் நான் கொடுக்க,
உன் ரத்தத்தை பாலாக்கித்
தந்த ஸ்ரீதேவீ நீ!!

மல்லிகையும், ரோஜாவும்
இன்னும் உயிர் வாழ
கூந்தல் ஏற்றி சூட்டிக்கொள்ளும்
பூக்களின் கடவுள் நீ!!

தினமும் உன்னைத்
தொழவே எழுந்திடும்
சூரியனின்
தாயும் நீ!

ரதியென்ன, ரம்பையென்ன,
மூவுலகிலும் இணையில்லா
சொரூபவதியும் நீ!

கொத்தித் திரியும்
குயில்களின் விழிகள் ஒத்த
கண்களைக் கொண்ட
சீதையும் நீ!

விரிந்து ஆடும்
மயில்களின் தோகையும் விட
மென்மை கொண்ட
கரங்களை உடையவளும் நீ!


நீ யின்றி
இக்கவிதை இல்லை
நானில்லை
உலகில்லை,
மோட்சமில்லை,
ஆக, நீயின்றி கடவுளும் உளவோ?


கொய்தது பிச்சி @ 5:27 AM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்